மேற்கு வங்கம் | அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளர் பவன் சிங்  விலகல் – திரிணமூல் விமர்சனம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருந்த போஜ்புரி பாடகர் பவன் சிங் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பவன் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி என் மீது நம்பிக்கை வைத்து அசான்சோல் தொகுதியின் வேட்பாளராக எனது பெயரை அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் தேர்தலில் அசன்சோல் தொகுதியில் போட்டியிட இயலாது” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த முடிவு குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பவன் சிங்-ஐ சாடியுள்ளனர். “இது மேற்கு வங்க மக்களின் மனஉறுதி மற்றும் வலிமை” என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சகரிகா கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தாக்கம்! பாஜக வேட்பாளரின் பாலியல் துன்புறுத்தல் வீடியோவினால் உண்டான பின்னடைவு காரணமாக அவர் அசன்சோல் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ளார். பாஜகவின் ‘பெண் சக்தி’என்ற பேச்சு மேற்கு வங்கத்தில் சிதைந்து கிடக்கிறது. அது அர்த்தமற்ற வெற்று வார்த்தை என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு எம்.பி., டெரிக் ஓ பிரைன், “விளையாட்டு தொடங்குவதற்கு முன்பே இந்த விளையாட்டு ஆரம்பித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளராக 38 வயதான போஜ்புரி பாடகர் பவன் சிங் தேர்வு செய்யப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. பலர் அவரது பாடல்களை முன்னிலைப்படுத்தி கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் மேற்கு வங்கப் பெண்கள் குறித்த தவறான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அசன்சோன் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது பாலிவுட் பிரபலம் சத்ருகன் சின்ஹா போட்டியிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.