இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் ஆ. ராசாவை பாதுகாப்பது யார்? – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் வெளிப்படையாக எல்லை மீறி பேசும் ஆ. ராசாவை பாதுகாப்பது யார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹாமிர்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அல்லது இந்துக்களை அல்லது ராமரை அவமதிக்கும் வகையில் பலமுறை பேசி இருக்கிறார்கள். மற்றொருபுறம் அவர்கள், நாட்டை துண்டாட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்படும் சின்ன சின்ன குழுக்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அவர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாட பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகிறார்கள்.

தற்போது, மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு நபர்(ஆ. ராசா) எல்லை மீறி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டுக்கொண்டு சனாதன தர்மத்துக்கு எதிராக, ராமருக்கு எதிராக கருத்துக்களைக் கூறி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை நான் கேட்கிறேன், அவரை யார் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள்? ஆ. ராசாவும், திமுகவும் சொல்வதை காங்கிரஸ் ஏற்கிறதா? காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதை ஏற்கிறதா? இந்தியா ஒரு நாடு என காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் போது பிரித்தாளும் அரசியல் ஏன் தலைதூக்குகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக, ஆ. ராசாவின் பேச்சுக்கு பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர் அமித் மாளவியா கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது ‘எக்ஸ்’ பதிவில், “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் குறைவின்றி தொடர்கின்றன. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்த பிறகு இப்போது ஆ.ராசா இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அழைப்பு விடுக்கிறார், பகவான் ராமரை கேலி செய்கிறார், மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் கருத்துகளை கூறுகிறார். ஒரு தேசமாக இந்தியா என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்.காங்கிரஸும் இண்டியா கூட்டணியின் மற்ற கட்சிகளும் அமைதியாக இருக்கின்றன. இவர்களின் உத்தேச பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியும் மவுனம் காக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆ.ராசாவின் கருத்தை கண்டிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறும்போது, “ஆ.ராசாவின் கருத்துகளை நான் 100 சதவீதம் ஏற்கவில்லை. இத்தகைய கருத்தை நான் கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். அது, ஆ.ராசாவின் சொந்த கருத்தாக இருக்கலாம். அதை நான் ஆதரிக்கவில்லை. ஒருவர் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி: `பாரத்மாதா கி ஜே’ குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.