சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கும் பத்திரிகையாளர்கள் ‘தொழிலாளர்கள்’ கிடையாது: மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: “சிறப்புச் சலுகைகளை அனுபவிப்பதால் உழைக்கும் பத்திரிகையாளர்கள் மகாராஷ்டிரா அரசின் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘பணியாளர்கள்’ என்ற வரைமுறைக்குள் வரமாட்டார்கள்” என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, இந்தச் சட்டத்தின் கீழ் உழைக்கும் பத்திரிகையாளர் தொழிலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் சந்தீரப் மார்னே அடங்கிய அமர்வு தனது பிப்.29-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் என்ற வரம்புக்குள் பத்திரிகையாளர்கள் வரவில்லை என்று தொழிலாளர்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் இருவர் தாக்கல் செய்த மனுகள் மீது மும்பை உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கின்றனர். தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் அவர்களுக்கு வழிவகை உள்ளது. உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் 1955 மூலம் ஏற்கெனவே அவர்களின் சிக்கல்களைத் தீர்க்க வழி வகைகளை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வேறுபாடு இல்லையென்றால், களத்தில் பணியாற்றாத பத்திரிகையாளர்கள் உட்பட பிற பணியாளர்களுக்கு மறுக்கப்படும் சிறப்புச் சலுகைகளை உழைக்கும் பத்திரிகையாளர்கள் அனுபவிக்க முடியாது. உழைக்கும் பத்திகையாளர்களுக்கான சிறப்புச் சலுகைகளை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டத்தின் திட்டங்கள் நிரூபிக்கின்றன. அவர்களின் சிறப்பு அந்தஸ்துக்காகவே அச்சட்டம் கொண்டுவரப்பட்டது” என்று தெரிவித்தது. தொடர்ந்து பத்திரிகையாளர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.