2-வது டி20: சாண்டோ அதிரடி அரைசதம்… இலங்கையை வீழ்த்திய வங்காளதேசம்

சிலெட்,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 37 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம், இலங்கை பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தது. வெறும் 18.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த வங்காளதேசம் 170 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ 53 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் பதிரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் முடிவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.