ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு புதிய கேட்போர் கூடம்!

  • மாணவர்களின் கல்விக்காக அன்று முதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிய சேவையாற்றியுள்ளார் – ருவன் விஜேவர்தன.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கமைய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா காலநிலைமாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவின் பங்களிப்புடன் நேற்று (06) நடைபெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த கேட்போர் கூடம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டதுடன், ஒரே நேரத்தில் சுமார் 5000 மாணவர்கள் ஒன்று கூடக்கூடிய சகல வசதிகளுடன் இந்த புதிய கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

புதிய கேட்போர் கூட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ருவன் விஜேவர்தன, கடற்படையினரின் பங்களிப்புடன் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக பூர்த்தி செய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாணவர்களின் கல்விக்காக ரணில் விக்ரமசிங்க அன்றிலிருந்து இன்று வரை பெரும் பங்காற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய ருவன் விஜேவர்தன, ஜனாதிபதி பியகம பிரதேச மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக அடுத்த மாதம் புதிய வைத்தியசாலையை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ருவான் விஜேவர்தன கூறியதாவது:

இந்த விசேட நிகழ்வில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வருடம் இக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட போது, ​​இக்கல்லூரிக்கு நிச்சயமாக கேட்போர் கூடம் வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியின் பிரகாரம் இன்று இக்கல்லூரியில் சகல வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்கியுள்ளதோடு, கடற்படையினரின் பங்களிப்புடன் கூடிய விரைவில் இந்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படும் என உறுதியளிக்கின்றேன்.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்த மல்வானை பிரதேசத்துக்கும் இடையில் பெரும் பிணைப்பு உள்ளது. பியகம தொகுதி அமைப்பாளராக பணியாற்றிய அவர் இப்பிரதேசத்திற்கு பெரும் சேவையாற்றியுள்ளார். குறிப்பாக இந்த மல்வானை பிரதேசத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் நாட்டின் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கும் அவர் பல பணிகளை செய்துள்ளார். இவருடன் இணைந்து சுரனிமலா ராஜபக்ஷவும் இப்பகுதியில் கல்விக்காக பெரும் சேவையாற்றியுள்ளார்.

புதிய கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் இப்பாடசாலைக்கு மட்டுமன்றி இப்பிரதேசத்திற்கும் பெரும் பயன் கிடைக்கும் என நான் நம்புகிறேன். ஏனைய பாடசாலைகளுக்கும் இந்தக் கேட்போர் கூடத்தைப் பயன்படுத்தலாம். அத்துடன், இந்தப் பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்படும் என கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார். அதன்படி, அடுத்த மாதத்திற்குள் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இத்தொகுதியில் மேலும் ஒரு தேசிய பாடசாலையை உருவாக்கும் இலக்கை அடைவது எனது மற்றுமொரு எதிர்பார்ப்பாகும்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார். இப்பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதையிட்டு நாம் பெருமையடைய வேண்டும்.

ஜனாதிபதியின் தலைமையில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைக்க நாம் அனைவரும் உறுதிபூண்டுள்ளோம். இந்த கேட்போர் கூடத்தை பாடசாலைக்கு வழங்குவதில் இப்பாடசாலையின் அதிபருடன் இணைந்து பழைய மாணவர் சங்கம் பெரும் பங்காற்றியது. அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மல்வான அல் முபாரக் மத்திய மகா வித்தியாலய அதிபர் எஸ். எச். எம்.நயீம்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.