விசிக-வின் Other State Politics… `போட்டி’ என அறிவித்ததன் நோக்கம் என்ன?!

தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் போட்டியிடப் போவதாக அறிவித்திருகிறார் கட்சித் தலைவர் திருமாவளவன். மற்ற மாநில தேர்தல் களத்தில் வி.சி.க களமிறங்குவதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு எத்தனை சீட் என முடிவாகாமல் இழுபறி நீடிக்கும் இச்சூழலில், தெலங்கானாவில் பத்து தொகுதிகளிலும், கர்நாடகாவில் ஆறு தொகுதிகளிலும், கேரளாவில் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

ஒருபுறம் இது, இது பானை சின்னத்தை பெறுவதற்கான யுக்தி எனச் சொல்லப்படுகிறது. சின்னம் ஒதுக்குவதில் பா.ஜ.க தன்வேலையை காட்டலாம் என்பதால் கவனமாக கையாளுகிறது வி.சி.க என்கிறார்கள். 11 மாநிலங்களிலும் போட்டிபோடுகிறோம் என விண்ணபித்து பாரதிய பிரஜா ஆகியதா என்ற கட்சி நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கொடுத்துவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். அதுபோல் ஆகிவிடக் கூடாதென்பதால் தமிழ்நாடு உள்பட 5 மாநிலத்தில் போட்டியிடுகிறோம் என அறிவித்துள்ளது வி.சி.க என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.

திருமாவளவன்

சின்னத்துக்கான மட்டும் போட்டியிடவில்லை என மறுப்புடன் பேசத் தொடங்கிய வி.சி.க-வினர் சிலர், “பல ஆண்டுகளாகவே, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கடந்தாண்டு, செப்டம்பரில் ஆந்திர மாநிலத்துக்கும் மே மாதம் நடந்த கர்நாடகா மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்காக வி.சி.க வலுவாக இருக்கக்கூடிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டதோடு, கட்சி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தெலங்கானா, ஆந்திரா, கேரளாவில், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கட்டமைப்பு உருவாக்கி விட்டதனால் களமிறங்குகிறது வி.சி.க” என்றனர்.

திருமாவளவன்

விவரமறிந்தவர்கள் சிலரோ, “இந்திய அரசியலில் பட்டியல் சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதைய நிலையில் பா.ஜ.க-வுடன் கைகோர்ப்பதும், பா.ஜ.க-வோடு மென்மையான போக்கைக் கைபிடிப்பதுமாக இருக்கிறார்கள். எனவே பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட பட்டியல் சமூக வாக்காளர்களைக் குறிவைத்துக் காய்நகர்த்துகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆனால் தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் `இந்தியா’ கூட்டணியுடன் தொகுதி பங்கீடு செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்பது வி.சி.க-வுக்குள்ள சிக்கல். தனித்து களமிறங்கினால் அது `இந்தியா’ கூட்டணிக்குஎதிராக போய்விடாதா என்ற கேள்வியும் கிளம்பிருக்கிறது” என்றனர்.

நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமான வி.சி.க-வினர் “விடுதலை சிறுத்தைகள் கட்சி பிற மாநிலங்களில் வளர்ந்து வருகிறது. அதற்கான அங்கீகாரமாகவும், மக்கள் மத்தியில் இன்னும் வீரியமாக கொண்டு செல்லவும்தான் போட்டியிடுவோம். பா.ஜ.க-வுக்கு எதிரான பிரச்சாரத்தைதான் வி.சி.க முன்வைக்கும். வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணி வைப்போம். இல்லையென்றால் தனித்து களமிறங்குவோம். `இந்தியா கூட்டணியின் வெற்றி பாதிக்காத வகையில் விசிக தென்மாநிலங்களில் போட்டியிடும்’ என திருமாவளவன் சொல்லி இருக்கிறார். மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றனர்.

இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதியில் விசிக வேட்பாளரை நிறுத்தும் எனில், அது எப்படி இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பாதிக்காமல் இருக்கும் என்ற கேள்விக்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.