2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில், 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கு, 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு, எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. அதனால், மத்திய பா.ஜ.க அரசை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துவந்தன. தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீரென பூமிபூஜை நடத்தியிருப்பது, அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன், “கடந்த வாரம்தான் பிரதமர் மோடி மதுரைக்கு வந்து சென்றார். எனவே, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உண்மையிலேயே தொடங்குவதாக இருந்தால், பிரதமர் மோடி தலைமையில் அதை பிரமாண்டமாக செய்திருக்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசுக்கோ, மாவட்ட நிர்வாகத்துக்கோ, மதுரை எம்.பி-க்கோ, அந்த இடம் அமைந்திருக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி-யான மாணிக்கம் தாகூருக்கோகூட தெரியாமல், யாரையும் அழைக்காமல் ஏன் பூமிபூஜை நடத்துகிறார்கள்?
உண்மையிலேயே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கியிருப்பது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம்தான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மதுரை எம்.பி-யின் விமர்சனம் குறித்து நமது விகடன் வலைதளப்பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கியிருப்பது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம் என எம்.பி குறிப்பிட்டிருப்பது, “சரி” – “தவறு” – “கருத்து இல்லை” என மூன்று விருப்பத் தேர்வுகளையும் கொடுத்திருந்தோம்.
இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட வாசகர்களில், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கியிருப்பது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம்’ என எம்.பி சு.வெங்கடேசன் கூறியிருப்பது ‘சரி’ என 75 சதவிகித வாசகர்களும், `தவறு’ என 21 சதவிகித வாசகர்களும், `கருத்து இல்லை’ என 4 சதவிகித வாசகர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தக் கருத்துக்கணிப்பைத் தொடர்ந்து, மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.100 குறைக்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.
அதற்கு விருப்பத்தேர்வாக `மக்கள் மீதான அக்கறை’, `தேர்தல் ஆதாயத்துக்காக’, `கருத்து இல்லை’ என மூன்று விருப்பத்தேர்வுகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க www.vikatan.com என்ற லிங்க்கை க்ளிக் செய்து, வாக்களிக்கலாம்.