சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டது. மேலும் சிறுவனைக் கடத்த முயன்றதாக ஒருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது அந்த நபர் நான் குழந்தையைக் கடத்தவில்லை என்று கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அங்குள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் போதையில் சிறுவனின் பின்னால் செல்லும் காட்சிகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இருப்பினும் போலீஸார் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இணை கமிஷனர் தர்மராஜன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“ குழந்தை கடத்தல் முயற்சி நடந்ததாக வந்த புகாரை அடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம். மேலும் குழந்தை கடத்தல் புகாரின் உண்மைத் தன்மையை அறிய 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுபோதையில் இருந்த நபர், சிறுவனை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சிறுவனின் உறவினர் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுபோதையில் சிறுவனை பின்தொடர்ந்து சென்றாரே தவிர, கடத்தும் முயற்சி எதுவும் நடக்கவில்லை. போலீஸாரிடம் விளக்கம் பெறாமல் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்.