அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவளித்த நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மற்றொரு பிரிவு நிர்வாகிகள் திமுகவுக்கு நேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக கட்சிகளுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச் 6-ம் தேதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.வி.கதிரவன் தலைமையில் நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் எஸ்.கர்ணன், எஸ்.சுரேஷ்தேவன், பி.எஸ்.தேவன் உள்ளிட்டோர் நேற்று அறிவாலயம் வந்தனர். அவர்கள், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இண்டியா கூட்டணியில் உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவி்த்திருப்பது தவறு. தேசிய அளவிலான நிர்வாகிகளுடன் கலந்து பேசாமல் அவர் தன்னிச்சையாக இம்முடிவை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றுவோம்’’ என்றனர்.