“வடகிழக்கில் நாங்கள் 5 ஆண்டுகளில் செய்ததை காங். செய்திட 20 ஆண்டுகள் ஆகும்” – பிரதமர் மோடி

இட்டாநகர்: “வடகிழக்கில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்திருப்பதை காங்கிரஸ் கட்சி செய்து முடிக்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங் சேலா சுரங்கப்பாதை உள்ளிட்ட ரூ.55,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இட்டாநகரில் நடந்த அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் சுற்றுலா, வணிகம் மற்றும் பிற உறவுகளுக்கான இந்தியாவின் முக்கிய இணைப்பாக வடகிழக்கு மாறும். இன்று இங்கு ரூ.55,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்திருக்கும் வளர்ச்சித் திட்டங்களைச் செய்ய காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகள் எடுத்திருக்கும். மோடியின் உத்தரவாதம் என்ன என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள அருணாச்சலப் பிரதேசத்துக்கு வந்து பார்க்க வேண்டும்.

மோடியின் உத்தரவாதம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒட்டுமொத்த வடகிழக்குமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிகாக நான் பாடுபடுவதால் ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் என் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்” என்று பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தொடங்கிவைத்த திட்டங்கள்: அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். அவற்றில் முக்கியமானது சேலா சுரங்கப்பாதை. ரூ.825 கோடியில் கட்டப்பட்டுள்ள இச்சுரங்கப் பாதை ஒரு பொறியியல் அதிசயம். இது அருணாச்சல பிரதேசத்தின் பாலிபாரா – சரிதுவார் – தவாங் சாலையிலுள்ள சேலா பாஸ் வழியாக தவாங்கை எல்லா காலங்களிலும் இணைக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தச் சுரங்கப்பாதை திட்டம், வேகமான மற்றும் சிறப்பான போக்குவரத்து வசதியைத் தருவதுடன், சீனாவின் எல்லைக்கு அருகில் இருப்பதால் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

இத்துடன் பிரதமர் அருணாச்சலப் பிரதேசத்துக்கான ரூ.41,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில், ரூ.31,875 கோடி மதிப்பிலான திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே உயரமான அணை கட்டுமானமாக இது இருக்கும். அதேபோல் பல்வேறு சாலைகள், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் கீழ் 1,100 திட்டங்களையும், யுனிவர்செல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃப்ண்ட்-ன் கீழ் அமைக்கப்பட்ட 170 தகவல் தொடர்பு கோபுரங்களையும் திறந்து வைத்தார். மேலும் பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 35,000 வீடுகளை பயனாளிகளுகளுக்கு ஒப்படைத்தார்.

பிற வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்கள்: மணிப்பூர் மாநிலத்தில் ரூ.3,400 கோடிக்கும் அதிகான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல் நாகலாந்தில் ரூ.1,700 கோடிக்கு அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும், திரிபுரா மாநிலத்துக்கான ரூ.8,500 கோடிக்கும் அதிகமான திட்டங்களை தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.