Father who killed son on wedding caught in Jaipur | திருமணத்தன்று மகனை கொன்ற தந்தை ஜெய்ப்பூரில் பிடிபட்டார்

புதுடில்லி:உடற்பயிற்சி நிலைய உரிமையாளரே, தன் மகனைக் கொடூரமாகக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

தெற்கு டில்லி டவ்லி விரிவாக்கத்தில் வசிப்பவர் ரங்லால் சிங்லால். உடற்பயிற்சி நிலையம் நடத்துகிறார். அவரது மூத்த மகன் கவுரவ் சிங்லால், 29. இவருக்கு, நேற்று முன்தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், திருமணத்தன்று அதிகாலை கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தினர். மாயமாகி இருந்த கவுரவின் தந்தை, ரங்லாலை தேடினர். அன்று இரவே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்த ரங்லால் கைது செய்யப்பட்டார்.

போலீசிடன் ரங்லால் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

இந்த சம்பந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும், என் மகன் என்னை பொது இடத்தில் அவமானப்படுத்தி வந்தார். என்னைக் கேவலமாக பேசினார். எங்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.

எங்களைச் சேர்த்து வைக்க சில நாட்களுக்கு முன் உறவினர்கள் பஞ்சாயத்து பேசினர். ஆனால், அவர்கள் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தினார்.

எனக்கு பிடிக்காத பெண்ணை, என் மகன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரங்லாலிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.