IPL: சிஎஸ்கேவில் தொடரும் சோகம்… முக்கிய பௌலருக்கு காயம் – தோனியின் பிளான் என்ன?

Injury For Chennai Super Kings Bowler: 17ஆவது ஐபிஎல் சீசன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் நிறைவடைந்துவிட்டது. எனவே, இந்திய அணியின் முக்கிய வீரர்களும் தங்களின் ஐபிஎல் அணிகளுடன் விரைவில் இணைவார்கள் என தெரிகிறது. கூடவே, உலகம் முழுவதும் நடைபெறும் மற்ற போட்டிகளும் கூடிய விரைவில் நிறைவடையும் என்பதால் அவர்கள் ஐபிஎல் அணிகளுடன் வரும் நாள்களில் இணைவார்கள். 

பயிற்சியில் எம்எஸ் தோனி

முதற்கட்டமாக, 17ஆவது ஐபிஎல் சீசனின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பிற போட்டிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மக்களவை தேர்தல் தேதி மற்றும் அட்டவணை வெளியான பின்னர் மற்ற போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போதே அனைத்து அணிகளும் தங்களின் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டது. 

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பயிற்சியாளர்கள் குழுவின் மேற்பார்வையில் ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார், முகேஷ் சௌத்ரி, ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் உள்ளிட்டோர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனியும் கடந்த சில நாள்கள் முன்னால் பயிற்சியில் இணைந்தார். 

சிஎஸ்கேவில் தொடரும் சோகம்

தொடர்ந்து, இந்தியா – இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த நிலையில் ரவிந்திர ஜடேஜா விரைவில் சிஎஸ்கே அணியுடன் இணைவார் என தெரிகிறது. நாளை தொடங்க உள்ள ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில், விதர்பா அணிக்கு எதிராக மும்பையின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கும் அஜிங்கயா ரஹானே, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் போட்டி முடிந்ததும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவார்கள் என தெரிகிறது. 

இது ஒருபுறம் இருக்க சிஎஸ்கே அணியின் ஓப்பனரான, நியூசிலாந்து அணி வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக தொடரின் முதல்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஷிவம் துபேவும் சில நாள்களுக்கு முன் காயம் காரணமாக ரஞ்சியில் இருந்து விலகிய நிலையில் அவர் எப்போது அணியில் இணைவார் என்ற கேள்வியும் ரசிகர்களின் மனதில் உள்ளது. 

மதீஷா பதிரானா காயம்

இந்நிலையில், தற்போது சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக கடந்த மார்ச் 6ஆம் தேதி நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் அவருக்கு இடது கால் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் ஓவர்களை முழுவதுமாக வீசாமல் பாதிலேயே பெவிலியன் திரும்பினார். இதனால், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்பது சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 

அவருக்கு கிரேட் 1 தொடை காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் 3ஆவது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக பார்க்கப்படும் மதீஷா பதிரானா ஐபிஎல் தொடரை தவறவிடும்பட்சத்தில் அது தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். 21 வயதான மதிஷா பதிரான கடந்த தொடரில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டைகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.