ஐபிஎல் தொடரில் இருந்து மற்றொரு வீரரும் விலகல் – மாற்று வீரர் அறிவிப்பு!

IPL 2024, Kolkatta Knight Riders: 17ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளன. இந்த போட்டியின் மீதும், ஐபிஎல் தொடர் மீதும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அதுமட்டுமின்றி தற்போது அடுத்த ஐபிஎல் தொடர் குறித்த பேச்சுகளும் கிளம்பி உள்ளன. அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் அணிகள் அடுத்தாண்டு ஏலத்தை முன்னிட்டு அதிகபட்சமாக 5 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதால் இந்தாண்டு எந்தெந்த அணியில் யார் யார் நன்றாக விளையாடுவார்கள், அதில் அடுத்தாண்டு யார் யார் தக்கவைக்கப்படுவார்கள் என்ற பேச்சுகளும் தற்போது கிளம்பிவிட்டன. 

தொடரில் இருந்து விலகிய வீரர்கள்

இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் தொடர் தொடங்குகிறது என்றாலே பல வீரர்கள் காயம் காரணமாகவும், பிற காரணங்களுக்காவும் தொடரில் இருந்து விலகும் அறிவிப்புகள் வெளியாகும். இந்த ஐபிஎல் சீசனிலும் பல முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். முகமது ஷமி, கஸ் அட்கின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். இதில் குஜராத் அணியில் முகமது ஷமிக்கு எந்த மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.

காயத்தால் அவதிப்படும் வீரர்கள்

மாறாக கொல்கத்தா அணியில் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவையும், லக்னோ அணியில் மார்க் வுட்டுக்கு பதில் ஷமார் ஜோசப்பையும் மாற்று வீரராக அந்தந்த அணிகள் அறிவித்துள்ளன. தொடர்ந்து, ரஷித் கான், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷிவம் தூபே, ரச்சின் ரவீந்திரா, முஸ்தபிஷூர் ரஹீம் ஆகியோரின் உடற்தகுதி இன்னும் உறுதியாகவில்லை. சென்னை அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான பதிரானா சில நாள்களுக்கு முன் காயத்தில் சிக்கினார். 

கேகேஆர் அணிக்கு கெட்ட செய்தி

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓப்பனரான இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் பில் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளார். 

பில் சால்ட் கடந்த ஏலத்தில் எந்த அணியினாலும் வாங்கப்படவில்லை. அவர் கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். ஜேசன் ராயின் விலை 1.5 கோடிக்கு பில் சால்ட் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். பில் சால்ட்டும் ஜேசன் ராய் போல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்றாலும், ஜேசன் ராயின் அதிரடி பேட்டிங்கை கேகேஆர் அணி நிச்சயம் தவறவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.