நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம்.. மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பிரதமர்

காத்மாண்டு:

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

இந்நிலையில், நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

அரசியலமைப்பு விதிகளின்படி, எந்தவொரு கூட்டணி கட்சியும் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற பிறகு, 30 நாட்களுக்குள் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே, வரும் 13-ம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது, பிரதமர் பிரசந்தா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது நெருக்கமான தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்க கட்சி முடிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்.

பிரசந்தா பிரதமர் ஆனபிறகு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும். புதிய கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.