சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் சுமார் 2,500 விருப்ப மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்றும், நாளையும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று திருவள்ளூர் (தனி ), வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ( தனி ), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ( தனி ), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ( தனி ) மற்றும் கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருவள்ளூர், சென்னை வடக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இதில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாளை பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் ( தனி ), மயிலாடுதுறை, நாகை ( தனி ), தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி) , கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது.