தமிழக மீனவர்கள் கைது: உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 11) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இலங்கைக் கடற்படையினர் மார்ச் 10 அன்று, இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு, 22 மீனவர்களை கைது செய்துள்ளனர். இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம். எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டுக்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடித் தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது. சமீபகாலமாக அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

இத்தகைய கைது நடவடிக்கைகள், பாதிக்கப்படும் மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

எனவே, உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாகவும், தீர்க்கமாகவும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.