சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் திங்கள்கிழமை (மார்ச் 11) வெளியானது. இந்த சூழலில் சிஏஏ அமலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.
“சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது பேசு பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளன. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.