CAA: குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஏற்கத்தக்கது அல்ல: விஜய் அறிக்கை
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இரட்டை இலைச் சின்னம்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
அதிமுக-வுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என சூர்யமூர்த்தி என்பவர் அளித்த மனுமீது பதில் அளிக்குமாறு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது!
தமிழ்நாடு தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமனம்!
சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை: சீல் வைக்கப்பட்ட கவரில் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைப்பு!
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அத்துடன் குற்றவாளிகளின் டி.என்.ஏ-வும் எடுக்கப்பட்டு, அதுவும் பரிசோனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமியின் உடற்கூராய்வு உள்ளிட்ட அறிக்கை, சீல் வைக்கப்பட்ட கவரில் விசாரணை அதிகாரியான எஸ்.பி லட்சுமி சௌஜன்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.!
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக மாணவ – மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த மாலினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்பு விடுமுறை நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள், தற்போது வேலை நாட்களில் போராடுவதால், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ – மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியுள்ள நிலையில், ஆசிரியர் போராட்டத்துக்கு தீர்வு காண அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர்கள் போராட்டம் மார்ச் 8ம் தேதி வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
புதுக்கோட்டையில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை பொறுள் பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் மீமிசலில் உள்ள இறால் பண்ணையில் ஹஷிஷ், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இந்தியாவுக்கு வெளியே இலங்கைக்கு கடத்தப்படுவதாக திருச்சி சுங்கத் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சுங்கத்துறை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சாட்சிகள் முன்னிலையில் பூட்டை உடைத்த ஆய்வு செய்து, ஹஷிஷ், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அடங்கிய 48 பைகளை மீட்டனர். அந்த பொருட்கள் ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ ஹாஷிஷ் மற்றும் 876 கிலோ உலர் கஞ்சா போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.05 கோடி. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கூடுதல் அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ… உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை, நிதி முறைகேட்டுக்கு இது வழிவகுக்கும் என Association for Democratic Reforms (ADR), Common Cause India மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால், மார்ச் 4-ம் தேதி எஸ்.பி.ஐ, `தேர்தல் பத்திரங்களின் விவரங்களை ஒப்படைக்க நான்கு மாத காலம் அவகாசம்வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ADR அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இது தொடர்பான மனுவில், “உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை எஸ்.பி.ஐ வேண்டுமென்றே மீறியிருக்கிறது. எஸ்.பி.ஐ-யின் இந்த செயல் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மறுப்பது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை வேண்டுமென்றே குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது” என்று ADR குறிப்பிட்டிருக்கிறது.
இந்த இரண்டு மனுக்களையும் இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.