“பிச்சைக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?” – குஷ்பு மீது அமைச்சர் கீதாஜீவன் காட்டம் @ உரிமைத் தொகை

சென்னை: “தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் நடுத்தர வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கைப் பார்த்துப் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குஷ்புவுக்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகை குஷ்பு, முதல்வர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் பற்றி மிக இழிவாகப் பேசியிருக்கிறார். குறிப்பாகத் தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாக இழிவுபடுத்தியுள்ளார். உரிமைத் தொகையைப் பெறுகின்ற அந்த ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி குஷ்பு பேசியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.

பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை நாம் இதன்மூலம் அறிய முடிகிறது. குஷ்புவுக்கு என்ன தெரியும்? தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் நடுத்தர வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கைப் பார்த்துப் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த மாதிரி பேசக்கூடாது. நிலை அறியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், உங்களுக்குத் தெரியாது. மாதம் ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கு அப்படித்தான் தெரியும். நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். நீங்கள் பெரிய நடிகர். உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். ஆனால் இந்த மாதிரி ஆயிரம் ரூபாய் வைத்துக் குடும்பம் நடத்துகிற, வாழ்வாதாரத்துக்காக, ஒரு மருத்துவச் செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக எத்தனையோ பேருக்குப் பலன் தருகிறது.

அதனைச் சிலர் “முதல்வர் எனக்குத் தரும் சீர்” என்று சொல்கிறார்கள். சில தாய்மார்கள், “என் பிள்ளைகள் என்னைப் பார்த்துக்கொள்ளாவிட்டாலும், மவராசன் முதல்வர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னைப் பார்த்துக்கொள்கிறார்” எனச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவக்கூடிய உரிமைத்தொகையை நீங்கள் அசால்டா “பிச்சை போடுகிறார்” என்ற வார்த்தையைச் சொல்கிறீர்கள்.

பிச்சை என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்கு எங்களுடைய தமிழக பெண்கள் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களும் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிச்சை, ஓ.சி பேருந்து என திமுக நிர்வாகிகள் கூறியபோது அக்கட்சியினர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, மகளிர் உரிமைத் தொகையை பிச்சை எனக்கூறியதற்கு குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். | விரிவாக வாசிக்க > “பிச்சை, ஓசி என திமுக நிர்வாகிகள் பேசியபோது கண்டிக்காதது ஏன்?” – குஷ்பு பதில் கேள்வி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.