50 passengers were injured as the plane went down | கீழ் நோக்கி பாய்ந்த விமானம் 50 பயணியர் படுகாயம்

சிட்னி, ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நோக்கி சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறால் கீழ்நோக்கி சென்றதால், ‘சீட் பெல்ட்’ அணியாத பயணியர் 50 பேர், இருக்கையில் இருந்து துாக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

பசிபிக் தீவு நாடுகளான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நோக்கி, சிலி நாட்டின் ‘லாதம் ஏர்லைன்ஸ்’ விமானம் நேற்று சென்றது. விமானம் நடுவானில் பறந்தபோது, சட்டென நிலை தடுமாறி கீழ்நோக்கி பயணித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விமானத்தில் இருந்த பயணியர் அலறினர். இதில், சீட் பெல்ட் அணியாததால் பலர், விமானத்தின் மேல் பகுதியில் முட்டி மோதி விழுந்தனர்; விமான பணியாளர், பயணியர் உட்பட 50 பேர் காயம் அடைந்தனர்.

எனினும், சில நிமிடங்களில் சீரான உயரத்தில் விமானம் பறந்ததால், திட்டமிட்டபடி ஆக்லாந்தில் தரையிறங்கியது.

இச்சம்பவத்தில் காயம் அடைந்த பயணியருக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த பயணியர் சிலர், ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், பயணி ஒருவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்றதாக விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.