Electoral Bonds: கறார் உத்தரவிட்ட நீதிமன்றம்; தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்.பி.ஐ!

மத்திய பா.ஜ.க அரசு 2018-ல் கொண்டுவந்த தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `இந்த திட்டம் சட்டத்துக்கு முரணானது’ எனக் கூறி கடந்த மாதம் ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களையும் மார்ச் 6-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 13-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் – தேர்தல் பத்திரம்

ஆனால், எஸ்.பி.ஐ வங்கியானது, தேர்தல் பத்திரங்களின் தகவலை ஒப்படைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கோரி, மார்ச் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. எஸ்.பி.ஐ-ன் இந்த கால அவகாச நீட்டிப்பு கோரிக்கையானது, மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு விவரங்களை வெளியிடும் வகையில் இருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “தீர்ப்பு வெளியாகி 26 நாள்களில் வங்கி என்ன பணிகளைச் செய்திருக்கிறது. நாளைக்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாட்டின் நம்பர் 1 வங்கி, எஸ்.பி.ஐ தானாக முன் வந்து விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். எஸ்.பி.ஐ-யிடமிருந்து கொஞ்சமாவது நேர்மை எதிர்பார்க்கப்படுகிறது” எனக் காட்டமாகக் கூறி, எஸ்.பி.ஐ-யின் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) – இந்திய தேர்தல் ஆணையம்

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்களின் தகவல்களை எஸ்.பி.ஐ சமர்ப்பித்திருக்கிறது. இனி, எஸ்.பி.ஐ அளித்த விவரங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நாளையே தேர்தல் ஆணையம் வெளியிடுமா என்று எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் கூடியிருக்கிறது. இன்னும், சில நால்களில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்பதால், தேர்தல் பத்திரங்கள் விவரங்கள்மீது கவனம் திரும்பியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.