பல்லாரி, : ”நான் என்ன தவறு செய்தேன். மெழுகுவர்த்தியாக எரிந்து, இந்த சமுதாயத்திற்காக உழைத்தேன். ஆனால், நீங்கள் என்னை சட்டசபை தேர்தலில் ஆசீர்வதிக்கவில்லை,” என, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உணர்ச்சிவசப்பட்டார்.
பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, எம்.எல்.ஏ., — எம்.பி., அமைச்சர் என பல உயர்ந்த பதவிகளை வகித்தவர். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த அவர், இம்முறை லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.
பல்லாரியின் பசவ பவனில் நேற்று நடந்த பழங்குடியினர் முன்னேற்ற கருத்தரங்கில், ஸ்ரீராமுலு பேசியதாவது:
எஸ்.சி., – எஸ்.டி., சமுதாய நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 11,330 கோடி ரூபாய் மானியத்தை, மாநில காங்கிரஸ் அரசு, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது.
சமூகத்திற்கு அநீதி இழைக்கும்போது குரல் எழுப்ப வேண்டும். பல்லாரி, ராய்ச்சூர் ஆகிய இரண்டு எஸ்.டி., தனித் தொகுதிகளில் மீண்டும், பா.ஜ., வெற்றி பெற வேண்டும்.
நான் என்ன தவறு செய்தேன்? மெழுகுவர்த்தியாக எரிந்து, இந்த சமுதாயத்திற்காக உழைத்தேன். ஆனால், என்னை சட்டசபை தேர்தலில் ஆசீர்வதிக்கவில்லை.
காங்கிரசின் சையத் நாசிர் உசேன், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று அவரது ஆதரவாளர்கள் விதான் சவுதாவில் கோஷம் எழுப்பினர். இவர்களுக்கு மானம் இருக்கிறதா?
இங்குள்ள தண்ணீர், காற்று, உணவை சாப்பிட்டு பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் சொல்லும் இவர்கள் அனைவரும் துரோகிகள். மோடி போன்ற பிரதமரை, பாகிஸ்தான் மக்களும் விரும்புகின்றனர்.
லோக்சபா தேர்தலில் நானும், தற்போதைய எம்.பி., தேவேந்திரப்பாவும் போட்டியிட விரும்புகிறோம். கட்சி யாருக்கு சீட் கொடுத்தாலும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்