மாலே, மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் இருந்து வீரர்களையும், கண்காணிப்பு விமானங்களையும் திரும்பப் பெறும் பணி துவங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்காசிய நாடான மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு கடந்தாண்டு பதவி ஏற்ற பின், சீனாவுடனான நட்பை வலுப்படுத்த துவங்கினார். இந்தியா உடன் அந்நாடு மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவப்படைப் பிரிவுகள், உதவிப் பணியாளர்கள் மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானங்களை திரும்பப் பெறும்படி மாலத்தீவு வலியுறுத்தியது. இதை, இந்திய அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து, மே 10ம் தேதிக்குள் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், மாலத்தீவின் தென்பகுதியான அடு என்ற இடத்தில் முகாமிட்டிருந்த, நம் ராணுவத்தின் 25 படைப்பிரிவுகள் மற்றும் ரோந்து விமானங்கள், 10ம் தேதிக்கு முன்னதாக திரும்பப் பெறப்பட்டதாக அந்நாட்டின் நாளிதழான ‘மிஹாரு’ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில், மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, மாலத்தீவு – சீனா இடையிலான ராணுவ உதவி ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இதன்படி, சீன ராணுவத்தினர் மாலத்தீவு வந்து அந்நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement