சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி இணைந்து போட்டியிடுவது தொடர்பாக அக்கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் புதன்கிழமை அதிமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோருடன் மன்சூர் அலிகான் சந்தித்து பேசுவார்த்தை நடத்தினார். இதில் அதிமுக கூட்டணியில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும், அப்படி ஒதுக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழ் தேசிய புலிகள் என இருந்த தனது கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மன்சூர் அலிகான் பெயர் மாற்றம் செய்தார். தொடர்ந்து வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுவேன் என அவர் கூறியிருந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.