பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற திங்கள் கிழமை (18ம்தேதி) கோவையில் “ரோட்ஷோ” நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி கோவை மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி பகுதியில் தொடங்கி, ஆர்.எஸ்.புரம் தபால்நிலையம் வரை 4 கி.மீ தொலைவுக்கு பேரணியாக வர திட்டமிட்டிருந்தனர். இதற்கு பாஜக தரப்பில் அனுமதி கேட்டநிலையில், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி வருகையை முன்னிட்டு எஸ்.பி.ஜி பிரிவு அதிகாரிகளும் கோவை வந்து காவல்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு வரை திறந்த காரில் நின்றவாறு மக்களை சந்திக்கும் `ரோடு ஷோ’ நடத்த உள்ளதாகவும், 4 கிலோமீட்டர் தூரத்துக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக கோவை மாவட்ட பா.ஜ.க அறிவித்திருந்தது.
ஆனால், பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு காரணம் கருதி கோவை காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
“மோடி பேரணி நடத்த திட்டமிட்டுள்ள பகுதியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலங்கள், போக்குவரத்து பணிமனை, பேருந்து நிலையம், பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் காய்கறி சந்தைகள் உள்ளன. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வீடுகளுக்கும், அதே போன்று பிற அலுவலகங்களுக்கு செல்வோர் வீடுகளுக்கு திரும்பும் நேரமாகும். மேலும் சாய்பாபா காலனி மற்றும் வட கோவை பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் மக்களின் அன்றாட பணிகளுக்கு இடையூறு நேரிடும். தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் பட்சத்தில் தேர்வுக்கு இடையூறு ஏற்படும்.
முக்கியமாக பிரதமருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது. அப்படி இருக்கும்போது 4 கி.மீதொலைவுக்கு, சாலையின் இரு புறங்களிலும் கூடும் பெருந்திரளான மக்களில் ஒவ்வொரு தனி நபரிடமும் அபாயகரமான பொருள்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருத்தல் தொடர்பான சோதனைகளை மேற்கொள்வது மிகுந்த கடினமான செயலாகும்.” என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து, இதை எதிர்த்து கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ் குமார் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி,“18-ம் தேதி மாலை 5 மணிக்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன்,“18-ம் தேதி நிகழ்ச்சிக்கு 14-ம் தேதிதான் கடிதம் கொடுத்தார்கள். 18,19-ம் தேதிகளில் பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது. கோவை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையும், காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் கூறுகையில், “பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு காவல்துறையில் நேற்று காலை மனு அளித்தோம். ஆனால் அனுமதி் மறுத்துவிட்டனர். பதற்றம் நிறைந்த காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலேயே அமைதியை ஏற்படுத்தி பிரதமர் அங்கு ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாவ்வே அனுமதி மறுக்கின்றனர். திட்டமிட்டபடி நிகழ்ச்சியை நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY