சீமான் சின்னத்தை பெற்ற கட்சி 40 இடங்களில் போட்டி – கூட்டணி அமைக்க அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை தற்போது அக்கட்சியினர் நாடியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் தாங்கள் போட்டியிட போவதாக தற்போது அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கட்சியின் மாநில தலைவர் ஆர்.கே.ஜெயக்குமார் கூறும்போது, “தமிழகத்தில் எங்களது கட்சி தொடங்கி 3 மாதங்களே ஆன போதிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் எங்களது கட்சி போட்டியிட தயாராக உள்ளது.

இதற்காக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுமானால் எங்களுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளலாம். அப்போது அவருக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படும். ஆனால் மற்றபடி அவருக்கு 100 சதவீதம் சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.