Indian couple, daughter killed in mysterious fire accident in Canada | கனடாவில் மர்ம தீ விபத்து இந்திய தம்பதி, மகள் பலி

ஒட்டாவா : கனடாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மகள் என, மூன்று பேர் தீயில் கருகி பலியாகினர்.

வட அமெரிக்க நாடான கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தின் பிராம்ப்டன் நகரில் வசிப்பவர் ராஜிவ் வரிக்கோ, 51.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தன் மனைவி ஷில்பா கோதா, 47, மகள் மாஹேக், 16, ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு, இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென பற்றி எரிந்த தீயில், வீடு முழுதும் தீக்கிரையானது.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும், வீட்டில் இருந்த ராஜிவ், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தீயில் கருகி பலியாகினர்.

அவர்களது உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பின், போலீசார் நடத்திய விசாரணையில், ராஜிவ் குடும்பத்தினர் இந்த தீ விபத்தில் பலியானது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; இது தொடர்பாக யாரேனும் தகவல் அளிக்க விரும்பினால், விசாரணை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.