சென்னை: தேர்தல் பணிகளால் மருத்துவ சேவை பாதிக்கப்படக்கூடாது என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பணிகளில், மருத்துவ சேவையில் எவ்விதபாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்டசுகாதார அலுவலர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் மெத்தனம் காட்டக்கூடாது.
மாநிலம் முழுவதும் கோடைகால வெயிலின் வெப்பம் அதிகரித்துவருகிறது. அந்நேரங்களில் மக்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைமற்றும் விழிப்புணர்வுகள் குறித்துஏற்கெனவே வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி தொடர்ந்து மருத்துவ சேவைஅளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது” என்றனர்.