அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாகவும், ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், தேர்தல் தேதி பிரதமர் மோடிக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டத் தேர்தல் தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டதால்தான் பிரதமர் மோடி அதற்கேற்றவாறு தமிழ்நாட்டு பிரசாரத்துக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகவும். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும், பிரதமர் மோடி எல்லா மாநிலங்களுக்கும் பிரசாரத்துக்குச் செல்லும் வகையில் தேர்தலைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி டெரிக் ஓ பிரையன் தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க-வின் கேவலமான தந்திரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் போன்ற தன்னிச்சை அமைப்புகளை அழிக்கின்றன. மக்களை எதிர்கொள்ள பா.ஜ.க மிகவும் பதற்றமாக இருக்கிறது.
அதனால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை வைத்து சூழ்ச்சி செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகளை இடமாற்றம் செய்கிறார்கள்! சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு எங்களுக்கு ஒரு உச்சநிலை கண்காணிப்பு வேண்டும். எனவே, இந்தத் தேர்தல் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நேற்றைய தினம் தலைமைத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்க டி.ஜி.பி உட்பட 6 மாநிலங்களின் உள்துறைச் செயலர்களை நீக்கி, உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.