தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை பெற்றிருக்கிறது ம.தி.மு.க. அக்கட்சியின் முதன்மை செயலாளார் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ம.தி.மு.க திருச்சி தொகுதியை பெற்றது ஏன்? ம.தி.மு.க-வுக்கான களம் திருச்சியில் எப்படி இருக்கிறது என விசாரித்தோம்.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இரண்டு தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 21 தொகுதிகளில் களமிறங்குகிறது தி.மு.க. ம.தி.மு.க-வை பொறுத்தவரை கடந்தமுறை ஒரு எம்.பி தொகுதியும், இரு ராஜ்ய சபா சீட்டும் பெற்றநிலையில் இம்முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே கிடைத்துள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி வசமிருந்த திருச்சி தொகுதியை ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கியுள்ளது தி.மு.க
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “இரண்டு எம்.பி சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டது ம.தி.மு.க, ஆனால் நிர்பந்திக்காமல் ஒரு தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள், ராஜ்ய சபா தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். ம.தி.மு.க-வின் தனிச்சின்னம் கோரிக்கையை மட்டும் பரிசீலித்தது தி.மு.க” என்றவர்களிடம், தொகுதி கணக்கீடுகள் குறித்து கேட்டோம்,
அது குறித்து தொடர்ந்து பேசியவர்கள் “2009 மற்றும் 2014-ல் வைகோ-வே நேரடியாக போட்டியிட்ட தொகுதி விருதுநகர். சமூக ரீதியான வாக்குகளும் அதிகமுள்ளதால் துரை வைகோ-வை அங்கேயே களமிறங்க வைக்கலாம் எனப் பேசப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூரிடமிருந்து தொகுதியை பறிக்க எந்தவொரு திடமான காரணங்களும் இல்லை. ஒன்று விருதுநகர் வேண்டும் அல்லது எளிதில் வெற்றிபெறக் கூடிய தொகுதி வேண்டும் என கோரியிருக்கிறது ம.தி.மு.க. அந்த வகையில் வைகோ போட்ட ஸ்கெட்ச்தான் திருச்சி தொகுதி.
திருச்சி ம.தி.மு.க-வுக்கு ஆதரவான தொகுதி என்பதைவிட தி.மு.க-வின் கோட்டை எனலாம். திருச்சி சட்டமன்றத்துக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் வென்றது தி.மு.க கூட்டணி. அதில் 5 தொகுதிகள் தி.மு.கவே வென்றிருக்கிறது. மேலும் தி.மு.கவின் அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவருக்கு கீழ்வருகிறது திருச்சியின் தி.மு.க மாவட்டங்கள். எனவே இரு அமைச்சர்களும் எப்படியாவது வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என நம்பிக்கை ம.தி.மு.க-வுக்கு உண்டு” என்றனர்.
தி.மு.க தரப்பில் கேட்டபோது, “கடந்தமுறை ம.தி.மு.க-வுக்கு 1+1 தொகுதிகளை ஒதுக்கியதைபோல் இம்முறை ஒதுக்கமுடியவில்லை. ஒரு தொகுதிக்கு ஒப்புக் கொண்ட ம.தி.மு.க-வுக்கு கேட்ட தொகுதியையாவது கொடுப்போம் எனக் கருதியது தி.மு.க. அவர்கள் கேட்ட விருதுநகர் கொடுக்க முடியவில்லை. ஆனால் திருச்சி சிட்டிங் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் அந்த தொகுதியை ம.தி.மு.க-விடம் கொடுத்துவிட்டோம். தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறது திருச்சி. உதயசூரியன் சின்னத்தில் இல்லாமல் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால் வாக்கு வித்தியாசம் வேண்டுமானால் குறையலாம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY