உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவு சரியான நேரத்துக்கு அளிக்காததால் மனைவியைக் கணவன் கொலைசெய்துவிட்டு, பின்னர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற அச்சத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, சீதாபூரில் நடந்த இந்த சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரேமா தேவி (28) என்றும், தற்கொலை செய்துகொண்ட அந்தப் பெண்ணின் கணவர் பெயர் பரசுராம் என்றும் தெரியவந்திருக்கிறது.
முன்னதாக, நேற்று மதியம் வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பரசுராம், மனைவியிடம் உணவு கேட்டிருக்கிறார். ஆனால், வீட்டில் அப்போது உணவு தயாராக இல்லை. பின்னர் உணவு ரெடியாக தாமதமானதால் கோபத்தில் மனைவியிடம் பரசுராம் சத்த போட, இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பரசுராம், கூரிய ஆயுதத்தால் மனைவியைப் பலமுறைத் தாக்கி கொலைசெய்தார். அதையடுத்து, பரசுராமும் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய தங்கோன் காவல் நிலைய அதிகாரி ஹனுமந்த் லால் திவாரி, “முதலில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன், பின்னர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று பயந்து வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்” என்று தெரிவித்தார்.