தமிழ்நாடு கேரள எல்லையில் தமிழகர்கள் அதிகம் வாழும் பகுதி மூணாறு. முக்கியமான சுற்றுலா தலமான மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிக பரப்பில் உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மூணாறு வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வனவிலங்குகளின் வழித்தடம் மற்றும் குடிநீர் ஆதாரப் பகுதிகள் கம்பி வேலிகளாலும், கட்டிடங்களாலும் அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா வரும் பயணிகள் நைட் ரைடிங் என்ற பெயரில் இரவு முழுவதும் வனப்பகுதிகளில் அதிக ஒலி, ஒளி எழுப்பிக் கொண்டு சுற்றுகின்றனர். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அருகில் நின்று போட்டோ மற்றும் செல்பி எடுக்க முயன்று விலங்குகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் நிம்மதியான இருப்பிடமின்றி காட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் யானைகள் நடமாட்டம் மூணாறு பகுதியில் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கன்னிமலை அருகே எஸ்டேட் தொழிலாளி சுரேஸ்குமார் யானை தாக்கி உயிரிழந்தார். அடிமாலி பகுதியில் இந்திரா என்ற மூதாட்டி யானை தாக்கி உயிரிழந்தார். தென்மலை பகுதியில் பால்ராஜ் என்பவரும் உயிரிழந்துள்ளார். சாலைகளில் செல்லும் வாகனங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் சிவன்மலை எஸ்டேட், பார்வதி டிவிசன், கடலார், தென்மலை, கன்னிமலை, நயமக்காடு, லட்சுமி எஸ்டேட் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாடக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்து எச்சரிக்கை (Alert ) விடப்பட்டு வருகிறது.