பாபட்லா: ஆந்திர மாநிலம், பாபட்லாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், விமானப்படை விமானங்களை தரையிறக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.
ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்களை ஆபத்தான நேரங்களில் தரை இறக்கும் பயிற்சி விமானப்படை சார்பில்நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. காலை 11 மணிக்கு நான்கு சுகோய் ரக போர் விமானங்கள், கொரிசபாடு எனும் இடத்தில் இருந்து, ரேனங்கிவரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 5 அடி உயரத்தில் பறந்தன.
பின்னர் அந்த விமானங்கள் வெற்றிகரமாக தரை இறங்கின. இதனை தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு ஏஎன் – 32 ரகவிமானமும், அதன்பின் டோர்னியர் ரக விமானமும் தரை இறக்கப்பட்டன. அதன்பின் அந்த விமானங்கள் நெடுஞ்சாலையில் இருந்து மீண்டும் பறந்து சென்றன. இந்த பயிற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாபட்லா மாவட்ட எஸ்பி வகுல் ஜிந்தால், இணை ஆட்சியர் ஸ்ரீதர், கூடுதல்எஸ்பி. பாண்டுரங்க விட்டலேஸ்வர், விமானப்படை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விமானசாகசத்தை பார்க்க சுற்றுப்புற கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் திரண்டனர்.
அவர்களுக்கு, போர் விமானங்கள் அவசர காலங்களில் நெடுஞ் சாலைகளை ஓடுதளமாக பயன் படுத்தும் நிகழ்வு குறித்து விமானப்படை அதிகாரிகள் விளக்கினர்.