கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது!

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டின் முதலாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (20) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்தபட்டது.

மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல் தொடர்பாக ஆராயப்பட்டு மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் வருடத்தில் 32 பிள்ளைகள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாகவும், அவர்களில் 29 பிள்ளைகள் மீளிணைக்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முன்பள்ளிகளுக்கான காலை உணவு வழங்குதல், கர்ப்பவதிகளுக்கான போசாக்கு பொதி விநியோகம் மற்றும் மாணவர்களின் போசாக்கு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

சுகாதாரம், பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், சிறுவர் இல்லங்கள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதனைவிட சட்டவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாககாவும் கலந்துரையாடப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.