முதல்வர் ஸ்டாலின் மார்ச் 22 முதல் ஏப்.17 வரை தேர்தல் பிரச்சாரம் – திமுக அட்டவணை

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 17 வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 22-ம் தேதி தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்ட தகவல்: 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார். அதன்படி, மார்ச் 22ம் தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளிலும், மார்ச்23ம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிகளிலும், மார்ச் 25ம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளிலும் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார்.

மார்ச் 26ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளிலும், மார்ச் 27ம் தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், மார்ச் 29ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளிலும், மார்ச் 30-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 31ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 2ம் தேதி வேலூர், அரக்கோணம் தொகுதிகளிலும், ஏப்ரல் 3ம் தேதி திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

ஏப்ரல் 5ம் தேதி கடலூர், விழுப்புரம் தொகுதிகளிலும், ஏப்ரல் 6ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளிலும், ஏப்ரல் 7ம் தேதி புதுச்சேரியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9ம் தேதி மதுரை, சிவகங்கை தொகுதிகளிலும்,

ஏப்ரல் 10ம் தேதி தேனி, திண்டுக்கல் தொகுதிகளிலும், ஏப்ரல் 12ம் தேதி திருப்பூர், நீலகிரி தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார். ஏப்ரல் 13ம் தேதி கோவை, பொள்ளாச்சி தொகுதிகளிலும், ஏப்ரல் 15ம் தேதி திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளிலும், ஏப்ரல் 16ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், ஏப்ரல் 17ம் தேதி தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கட்சியினர், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.