புதுடில்லி, ‘மதுபான கொள்கை வாயிலாக ஊழலில் திளைத்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவில் வெளிவரும்.
‘கைதாகி உள்ள கவிதாவை, ‘திஹார் கிளப்’புக்கு வரவேற்கிறேன்’ என, மோசடி வழக்கில் டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் வெளியிட்டுள்ளார்.
பணப்பரிமாற்றம்
இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தருவதாக கூறி, தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி என கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த இவர், பலமுறை கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ், டில்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
அவ்வப்போது அதிரடியாக சில கடிதங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.
சிறையில் இவர் விருப்பம் போல ஏகபோகமாக வாழ்வதற்காக ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பகீர் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் பல புகார்களை கூறியுள்ளார்.
இந்நிலையில், டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
திடுக்கிடும் தகவல்கள்
அவரிடம் டில்லியில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த அதிரடி கடிதத்தை சுகேஷ் சந்திரசேகர் வெளியிட்டுஉள்ளார்.
அதன் விபரம்:
கவிதா கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்னும் பல ஊழல்கள் வெளிவரும்.
ஊழலில் கவிதாவுடன் இணைந்து செயல்பட்ட அவரது நெருங்கிய நண்பரும், ஊழல் மன்னருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும்.
எனக்கு பல தகவல்கள் தெரியும். நான் அதை வெளியிடு வேன். கவிதாவும் அவரது கட்சியும் சிங்கப்பூர், ஹாங்காங், ஜெர்மனி போன்ற நாடுகளில் குவித்து வைத்துள்ள ஊழல் பணம் விரைவில் வெளிவரும்.
எனவே, ஆதாரங்களை மறைப்பதை கைவிடுங்கள். உங்கள் ஊழலை நிரூபிக்க தேவையான போதிய ஆதாரங்கள் உள்ளன.
கவிதா அக்காவை, ‘திஹார் கிளப்’புக்கு வரவேற்கிறேன். விரைவில் நேரில் சந்திக்க காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்