திருவனந்தபுரம், விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து உலோகப் பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின், தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
விண்வெளி துறையில், இந்தியா முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தத் துறையில் மேலும் வளர்ச்சிகளை அடைவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
தற்போது விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சில அடிப்படை மூலப் பொருட்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதில் சுயசார்பு நிலையை எட்டும் நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
உலோகக் கலவைகள், தேவைப்படும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வது இதன் நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.