சேலம், மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த நீச்சல் போட்டியில் சேலம் வீரர்கள், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில நீச்சல் போட்டி, கடந்த, 16ல் நடந்தது. அதில் சேலம், பொன்னம்மாபேட்டை ஓயாசிஸ் நீச்சல் குளத்தில் செயல்படும் பால்கன் அகாடமியில், இலவச பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளிகள், 14 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். இவர்களில், 4 பேர், தேசிய பாராலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
இதில் வேல்முருகன், ஜெயசெல்வன், சுந்தரபாண்டி ஆகியோர், தலா, 3 தங்கம், சுப்ரமணியன் ஒரு தங்கம், இரு வெள்ளி, சரவணன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஹரிபாலன், 3 தங்கம், கார்த்திகேயன், 3 வெள்ளி, விஜய் ஒரு வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், சேலம் மாவட்டம் பெற்றது.
இதுகுறித்து பால்கன் அகாடமி பயிற்சியாளர் முகமது தப்ரஷ்கான் கூறியதாவது:
உறவினர் ஜமால் பாஷாவை, பாராலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தயார்படுத்தி சர்வதேச உரிமம் பெற்றுத்தந்தேன். பின் நிறைய மாற்றுத்திறனாளிகள் நீச்சல் பயிற்சி தர முடியுமா என கேட்டனர். அவர்களில் பலரும் வசதி குறைவாக இருந்ததால், சேலத்தில் தங்க இடம், உணவு, பயிற்சி ஆகியவற்றை இலவசமாக வழங்கி போட்டிக்கு தயார் செய்தோம். தற்போது மாநில போட்டியில் சாதித்துள்ளனர்.
இவர்களில் 4 பேர், மார்ச், 29 முதல், 31 வரை குவாலியரில் நடக்கும் தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். நீச்சல் பயிற்சி பெற்று போட்டியில் பங்கு பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கு உதவ விரும்புவோர், 96006 16631 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement