அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக வாதிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டெல்லி துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோருடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்து வந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தன் மீதான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறை காவல் ஆகியவை சட்டவிரோதமானவை என்றும், தன்னை அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.