ஐ.பி.எல்; அபிஷேக் போரெல் அதிரடி – டெல்லி கேப்பிடல்ஸ் 174 ரன்கள் குவிப்பு

முல்லன்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரில் 2வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வார்னர் 29 ரன், மார்ஷ் 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 33 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ரிக்கி புய் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பண்ட் 18 ரன்னிலும், ரிக்கி புய் 3 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து அக்சர் படேல் மற்றும் சுமித் குமார் ஜோடி சேர்ந்தனர்.

இதில் அக்சர் 21 ரன்னிலும், சுமித் குமார் 2 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரிக்கி புய்க்கு பதிலாக இம்பேக் பிளேயராக களம் இறங்கிய அபிஷேக் போரெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஹோப் 33 ரன், அபிஷேக் போரெல் 32 ரன், வார்னர் 29 ரன் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.