பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.6.7 லட்சம் பணத்துடன் சிக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

சென்னை: வருமானவரித் துறையினர் கொண்டு சென்ற 6.7 லட்சம் ரூபாயைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தனி நபர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும்.

இல்லையென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்வார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் போலீஸாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தேர்தல் பறக்கும் படையினர் சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டர்சன் சாலை – மூர்ஸ் சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு ஆயிரம் விளக்கு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் ரூ.6.7லட்சம் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காரில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, காரில் பணத்துடன் வந்தவர்கள் வருமானவரித் துறையில் பணியாற்றி வரும் நாராயணசாமி, அக்‌ஷய் குமார் என்பதும், விமான நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி டெல்லிக்குப் பணத்தை எடுத்துச் செல்ல முயன்ற தனியார் நிறுவன பணியாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் அது என்பதும் தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காரில் கொண்டு செல்லும்போது வாகன சோதனையில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் தேர்தல் பறக்கும் படை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் வருமானவரித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக முறைப்படி விளக்கக்கடிதம் கொடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.7 லட்சம் பணத்தைபறக்கும் படை அதிகாரிகளிடமிருந்து பெற்றுச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.