“விவசாயிகள் வருவாய் எங்கே இரட்டிப்பானது?” – மோடிக்கு சரத் பவார் சரமாரி கேள்வி

புனே: விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதியில் தொடங்கி மே 20-ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் பாரமதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இந்தபூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார், சிவசேனா (யுபிடி) எம்.பி சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரமதி தொகுதியில் போட்டியிடும் சுப்ரியா சுலேவை ஆதரித்துப் பேசிய சரத் பவார், “நாடு இன்று வித்தியாசமான நிலையில் இருக்கிறது. வரக்கூடிய மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியமானது. 2024-க்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் மோடி ஒருமுறை கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் இழப்பீடு கோரினர். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையாக உழைத்து வருகிறார். இருந்தும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த முறை நடைபெற்ற டெல்லி தேர்தலில் பாஜக 2% வெற்றியை மட்டுமே பெற்றது. 98% வெற்றியைப் பெற்றவர் அரவிந்த் கேஜ்ரிவால். மோடி அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோடி அரசுக்கு எதிராகப் பேசியதால், சஞ்சய் ராவத்தும் கைது செய்யப்பட்டார்” என குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய சஞ்சய் ராவத், “தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் வெளியேறியது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை இந்தப் பொதுக் கூட்டம் நிரூபித்துள்ளது. இதேபோல், சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறிதால், சிவசேனா பலவீனமடைந்துவிடவில். மாறாக, வலிமை கூடியுள்ளது.

பாஜக எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறது. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். அடுத்த 4 மாதங்களில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை நாம் பார்ப்போம். நமது அரசு அமைந்த பிறகு, கட்சியில் இருந்து ஒருவரும் விலகி பாஜகவில் இணைய மாட்டார்கள்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.