மும்பை இந்தியன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன் 39 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். பின் வரிசையில் இறங்கிய ராகுல் டிவாட்டியா 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜஸ்பிரீத் பும்ரா மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் என்ற முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக நமந்திர் 20 ரன்கள் எடுத்த ஆட்டம் இழக்க, டேவால்ட் பிரெவிஸ் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இருந்தார்.
அதேபோல் ரோகித் சர்மாவும் 43 ரன்கள் எடுத்தபோது தமிழக வீரர் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் ஆட்டம் இழந்தபோதும், மும்பை அணிக்கு வெறும் 4 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் பின் வரிசையில் களம் இறங்கிய எந்த பிளேயரும் ஒழுங்காக விளையாடவில்லை. பாண்டியா 11 ரன்களுக்கும், டிம் டேவிட் 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க மற்ற அனைவரும் மிக சொற்ப ரன்களுக்கு விக்கெட் பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றியின் விளிம்பில் இருந்த மும்பை அணி தோல்வியை தழுவ நேரிட்டது. அத்துடன் அவருடைய தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியை ஐபிஎல் 2024 தொடரில் பதிவு செய்திருக்கிறது.