Simbu: `மஞ்சும்மல் பாய்ஸ்' குழுவினருடன் சந்திப்பு; `STR 48' குறித்து அவர்களிடம் விவரித்த சிம்பு!

சமீபத்தில் நடிகர் சிலம்பரசன், மலையாளப் படமான `மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை தன் வீட்டிற்கு வரவழைத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். இந்தச் சந்திப்பில் என்ன பேசினார்கள், படத்தின் இயக்குநர் சிதம்பரத்துடன் சிம்பு ஒரு படம் நடிக்கிறாரா, இந்தத் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன ஆகியவை குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் இது.

இயக்குநர் சிதம்பரத்துடன் சிம்பு

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்திற்காக சிம்பு தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறார். இதற்காக பாங்காக், துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்று, மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுவருவதுடன், உடம்பையும் கதாபாத்திரத்திற்கான தோற்றத்திற்கு ரெடி செய்து வருகிறார். சமீபத்தில் துபாயிலிருந்து சென்னை திரும்பிய அவர், மலையாளத்தில் 200 கோடி வசூலை அள்ளிய முதல் படம் என்ற பெருமை கொண்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரைத் தன் வீட்டிற்கு வரவழைத்துப் பேசி மகிழ்ந்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம், மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழகத்திலும் வரவேற்பை அள்ளியது. இந்தப் படத்தை துபாயில் பார்த்து மகிழ்ந்த சிம்பு, படத்தின் இயக்குநர் சிதம்பரம் உட்படப் படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தினார். இந்நிலையில் சமீபத்தில் துபாயிலிருந்து சென்னை திரும்பினார் சிம்பு.

இந்நிலையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக் குழுவினர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை வந்திருப்பதாக அறிந்த சிம்பு, அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்ட விரும்பினார். அவர்களை தன் வீட்டிற்கு அழைக்க, அவர்களும் வந்திருந்தனர். 45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் இயக்குநர் சிதம்பரம், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ உருவான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினருடன் சிம்பு

சிம்புவும், ‘STR 48’ படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் குறித்த விஷயங்கள் மற்றும் அதில் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கவிருப்பது உள்ளிட்ட விவரங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதன்பின் குழுவினர் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த வரவேற்பினை சொல்லி மகிழ்ந்தார்கள்.

அவர்கள் அனைவரையும் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் சந்தித்தனர். டி.ஆரும் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றதுடன், “படம் நல்லா இருக்குதுன்னு சொன்னாங்க… சீக்கிரமே படத்தைப் பார்த்துட்டு உங்களுக்குப் பேசுறேன் சிதம்பரம்” எனச் சொல்லிவிட்டு, இயக்குநர் சிதம்பரத்தையும் ரைமிங்காகப் பாராட்டியிருக்கிறார். டி.ஆரின் பாராட்டு மழையில் நனைந்து திரும்பியிருக்கிறார்கள் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.