புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று சிறையில் இருந்தபடி சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது அவர் சிறையில் இருந்தபடி பிறப்பிக்கும் இரண்டாவது உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. இதனை நிராகரித்து வந்த கேஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான பிறகும் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை காவலில் இருந்தாலும், டெல்லி மக்களின் நிலை குறித்து கவலைப்படுகிறார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், டெல்லி மக்கள் அதனால் பாதிக்கப்படக்கூடாது என நினைக்கிறார். மேலும், டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி முதல்வர் எனக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி மொஹல்லா மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பு வைப்பதை உறுதிசெய்யவும், டெல்லி மக்களின் நல்வாழ்விற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது ஒரே கவலை என்னவென்றால், அவர் இல்லாத நேரத்திலும் எந்த சேவையும் பாதிக்கப்படாது என்பதுதான். நாங்கள் அவருடைய தொண்டர்கள். 24 மணி நேரமும் வேலை செய்வோம், ஆனால் டெல்லிவாசிகள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்” என்றார்.
காவல்துறை துணை ஆணையர் தேவேஷ் குமார் மஹ்லா கூறுகையில், “ ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பிரதமர் இல்லம் மற்றும் படேல் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நாங்கள் போதுமான அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். எந்த ஆர்ப்பாட்டமும் அனுமதிக்கப்படாது” என்றார்.
டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பது போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைபின், “துக்ளக் சாலை, சப்தர்ஜங் சாலை அல்லது கெமால் அட்டதுர்க் மார்க்கில் எங்கும் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது” என்று காவல்துறை அறிவுறுத்தியது.
முன்னதாக கேஜ்ரிவாலின் முதல் உத்தரவு பற்றி டெல்லி நீர் வளத் துறை அமைச்சர் அதிஷி, “டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் தன்னைபற்றி கவலைப்படவில்லை. டெல்லி மக்கள் குறித்தும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் மட்டுமே அவர் கவலைப்படுகிறார். சிறையில் இருந்தபடியே அவர் தனது முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில், டெல்லியில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். துணைநிலை ஆளுநரின் ஆதரவை கோர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.