ரச்சின், துபே அதிரடி: சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவிப்பு

சென்னை,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ரஹானே 12 ரன் எடுத்த நிலையிலும் நிலைத்து நின்று ஆடிய கெய்க்வாட் 46 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷிவம் துபே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 23 பந்துகளில் 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து சமீர் ரிஸ்வி களம் இறங்கினார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 51 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.