அமலாக்கத் துறைக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் – கேஜ்ரிவாலுக்கு சிக்கல் நீடிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கோரிக்கைகளை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. கேஜ்ரிவால் தனது மனுவில், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை அமலாக்கத் துறையின் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.

கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், டெல்லி முதல்வரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரினர்.

இந்த நிலையில், வழக்கை அவசரமாக விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மற்றும் ரிட் மனுவுக்கு பதில் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கேட்டது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ செவ்வாய்க்கிழமைதான் மனுவின் நகல் வழங்கப்பட்டது. பதில் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உயர் நீதிமன்றம், ஒரு வழக்கை விசாரித்து நீதி வழங்கும்போது, இயற்கையான நீதியின் கொள்கைகளை மனதில் வைத்து இரு தரப்பினையும் தீர விசாரிப்பது நீதிமன்றத்தின் கடமை. இந்த வழக்கை தீர்மானிப்பதற்கு அமலாக்கத் துறையின் பதில் மிகவும் முக்கியமான இன்றியமையாதது. ஏப்ரல் 2-ம் தேதிக்குள் அமலாக்கத் துறை தனது பதிலைத் தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.