தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் டி.டி.வி.தினகரன் வந்த பிரசார வேனை போலீஸார் மறித்தனர். அவருடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்று தடுத்தனர். இதனால் அப்பகுதியில் அமமுக-வினர் மற்றும் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்த டி.டி.வி .தினகரனை, அவருக்கு முன்னதாக வந்து காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய டி.டி.வி.தினகரனுடன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சென்றார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதைப்போல இங்கும் டி.டி.வி.தினகரன் ஏமாற்றுவார் என தங்க தமிழ்ச்செல்வன் விமர்சிப்பதாக எழுப்பிய கேள்விக்கு, “பேசினாலே பொய் பேசக்கூடியவர்கள் உளறுவோருக்கு என்ன பதில் சொல்வது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அ.தி.மு.க-வினர் வாக்குக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்.
அதனால் ஆர்.கே.நகரில் என்னுடன் இருந்த 18 எம்.எல்.ஏ-க்களில் சிலரில் ஆர்வக் கோளாறில் அவர்கள் விருப்பத்தின் பேரில் 30, 40 பூத்களில் 20 ரூபாயா அல்லது டோக்கனா, பேப்பரோ கொடுத்திருக்கிறார்கள். அப்படி கொடுத்ததில் இவர் தான் முக்கியமான ஆள், தங்க தமிழ்ச்செல்வன். அப்போதே அழைத்து அவரைக் கண்டித்தேன். திருடியவனே திருடன் திருடன் எனச் சொல்லிக் கொண்டு ஓடுவதைப்போல இருக்கிறது அவர் கூறுவது.
இந்த தொகுதிக்கு வந்தது, மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இது என் நெஞ்சத்தோடு இணைந்த தொகுதி. தங்க தமிழ்ச்செல்வன் விரக்தியில் பேசுவதற்கு பதில் சொல்ல முடியாது. ஜெயலலிதா இருக்கும் போது எம்.பி-யாக பல்வேறு திட்டங்களை கேட்டு பெற்றுத் தந்திருக்கிறேன்.
இங்கிருக்கும் தமிழக முதல்வர் சொன்னதை செய்யவில்லை. எம்.பி ஆனதும் சொல்லியதை பிரதமர் மோடியிடம் கேட்டு செய்வேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட எத்தனையே திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இவையெல்லாம் கூறி மக்களின் ஆதரவை பெறுவோம். நான் வெற்றி பெற்ற உடன் மோடியிடம்தான் திட்டங்களை கேட்டு பெற வேண்டும். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுப்பது, அதனால்தான் மோடியை முன்னிருத்தி பேசுகிறேன்” என்றார்.