ஈரோடு எம்பி கணேசமூர்த்தி காலமானார்

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியாக தற்போது பதவி வகித்து வருபவர் அ.கணேசமூர்த்தி (77). கடந்த 2019-ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின்போது, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகளாக எம்பியாக பதவி வகித்து வந்த கணேசமூர்த்திக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) அன்று ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த கணேசமூர்த்திக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுய நினைவு இல்லாமல் இருந்த அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கும் நோக்கில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த பிறகே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.