"குழந்தைகளுக்காக…" – மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த ஆலியா – நவாசுதின் சித்திக் தம்பதி!

`பஜ்ராங்கி பாய்ஜான்’, `பத்லாபூர்’, `தலாஷ்’, `கஹாணி’, `பாம்பே டாக்கீஸ்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் நவாசுதின் சித்திக். தமிழில் `பேட்ட’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் தனது மனைவி ஆலியா சித்திக்குடன் கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கடந்த 2020ம் ஆண்டு ஆலியா சித்திக் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

குழந்தைகளைத் தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவேண்டும் என்று கோரி நவாசுதின் சித்திக் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆலியா தனது இரண்டு குழந்தைகளுடன் துபாயில் இருந்தார். திடீரென இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மும்பைக்கு வந்த ஆலியா, நேராகத் தனது கணவர் வீட்டிற்குச் சென்றார்.

நவாசுதின் சித்திக், ஆலியா சித்திக்

ஆனால் வீட்டிற்குள் அவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் நவாசுதின் சித்திக்கின் பெற்றோர் விடவில்லை. இது தொடர்பாக ஆலியா சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். கோர்ட் இருவரையும் சமரசமாகச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. ஆலியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக அவர்கள் தொடர்பான செய்திகள் எதுவும் வராமலிருந்தன. குழந்தைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு ஆலியாவும் துபாய் சென்றார்.

இந்நிலையில் தற்போது இருவரும் மீண்டும் சமரசமாகி இருக்கின்றனர். இருவரும் தங்களது 14வது திருமண நாளை துபாயில் கொண்டாடியிருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நவாசுதின் சித்திக், ஆலியா சித்திக்

இது தொடர்பாக ஆலியா சித்திக் அளித்த பேட்டியில், “எங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மூன்றாம் நபர்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். தவறான புரிதல்கள் எங்கள் வாழ்வில் தற்போது இல்லை. எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். இருவருக்கும் இடையில் கெட்ட நினைவுகள் இருந்தாலும் சில அழகிய அன்பான தருணங்களும் இருக்கின்றன. நாங்கள் அந்த இனிமையான தருணங்களையே எடுத்துக்கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடர முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.